Thursday, March 9, 2017

2.2 ஆலய அமைப்பு சாத்திர முறை - தத்துவம்

2.2 ஆலய அமைப்பு - சாத்திர முறை - தத்துவம்
ஓர் ஊரில் ஆலயம் கட்டி அது நீடித்து அருள் விளக்கமாகவும், கலைக் கருவூலமாகவும் அமைந்திட, ஆகம விதிகளைத் தொடக்கத்திலிருந்து பின்பற்றுவது நல்லது. சிற்பநூல் முறைப்படி ஆலயம் கட்டத் தொடங்கினால் வாஸ்து நன்கு அமைந்திடும்.

2.2.1 அமைப்பு
சில தெய்வங்களைத் தவிரப் பெரும்பாலும் அருள்மிகு பெருந்தெய்வங்களுக்கு ஆலயத்தை ஊரின் நடுப்பாகமாகிய பிரம்ம பாகத்தில் அமைத்தல் வேண்டும். இத்தகைய ஆலயம் 2 முதல் 5 வரை சுற்றுப் பிராகாரங்களுடனும் நான்கு கோபுர வாயில்களுடனும், நடுவில் விமானங்களுடனும் அமைத்தல் வேண்டுமெனச் சைவ ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.

நிலத்தை முறைப்படி சோதனை செய்து சல்யோத்தாரம் செய்வது நல்லது. பூமியை 25 அடி ஆழம் வெட்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, ஓடு, கல், மயிர், எலும்பு முதலிய பொருள்களை நீக்கித் தூய்மையான மணலால் நிரப்பி அழுத்திவிட வேண்டும். மலைக்கோயில் கட்டுவதெனின் வேறுவகை அணுகுமுறையைப் பின்பற்றுவர்.

2.2.2 சாத்திர முறை
கட்டடம் கட்ட நிர்ணயித்த இடத்தில் இட்டிகைத் தாபனம், அஃதாவது நான்கு செங்கற்களைத் தேர்ந்தெடுத்துப் பூசை செய்து, ஒமம் வளர்த்துத் தெய்வ நலச் சிந்தனையுடன் குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். பிறகு கருப்பநியாசம் தேவையாகும்.

கருப்பநியாசம்
திருக்கோயிலில் மூல மூர்த்தியை நிறுவக்கூடிய இடத்திலும், கோபுரங்களில் கால்கள் நிறுத்துமிடத்திலும், சபைகள் திருமடங்கள் என இருப்பின் அவற்றின் ஈசான்ய பாகத்திலும், விமானங்களில் ஸ்தூபியின் அடிப்பாகத்திலும், விமானங்களில் ஸ்தூபியின் அடிப்பாகத்திலும் கருப்பநியாசம் புரிதல் வேண்டும்.

உபபீடம் அமைத்தல்
கருவறையில் அதிட்டானம் அமைப்பதற்கு வசதியாக உபபீடம் அமைத்தல் தேவைப்படும்.

குறிப்பிட்ட இடத்தில் திருக்கோயிலின் பிராசாதம் 24 அங்குலம் என்ற அளவையினால் 20-30-50 அளவுள்ள அகல நீளமுள்ளது உத்தம பிராசாதம்; அதே அளவையினால் 10-12-16 அளவுள்ளது மத்திம பிராசாதம்; அதே அளவையினால் 7-8-9 அளவுள்ளது அதமப் பிராசாதம் ஆகும். சரியான அளவுடன் அப்படி நிர்ணயம் செய்த பிராசாதத்தின் அடிப்பரப்பை 25 பாகம் செய்து 9 பங்கில் கருப்ப கிருகமும், 16 பங்கினைச் சுற்றுச் சுவரைக் கனமாக அமைக்கப் பயன்படுத்துதல் வேண்டும்.

லிங்கத்தின் அளவைக் கொண்டு பிராசாதம் அமைக்குங்கால் மகாலிங்கத்தின் சுற்றளவு 3 கொண்டது பீடமாகும். அந்தப் பீடத்தின் அளவு 3 பங்கு கொண்டது கருப்ப கிருக அகலமாகும். கருப்ப கிருக அளவில் மூன்றில் ஒரு பங்கு சுற்றுச் சுவராகும். அப்படி நிர்ணயம் செய்த பிராசாத கருப்ப கிருக அளவை 8 பாகம் செய்து, ஒரு பங்கு சேர்த்துக் கொண்டு உபபீடம் அமைக்க வேண்டும். உபபீடத்தின் உயரமும் அகலத்தின் எட்டில் ஒரு பாகமாக இருத்தல் வேண்டும். இந்த உபபீடம் ஸ்ரீகரம், லலிதம், பத்ரம் என மூன்று வகைப்படும்.

அதிட்டானம் அல்லது பிராசாதம்
ஆலயத்தில் பெருஞ் சிறப்பினைக் கொள்ளும் பாகம் கருவறையாகும். அந்தக் கருவறைக்கு அதிட்டானமே தோற்றப் பொலிவைத் தர அடிப்படையாக விளங்குவது.
உபபீடத்தின் மேலே அதிட்டானம் அமையும்; அது விமானத்தின் கீழ்ப்பக்கம் வியாளம் என்ற வர்க்கம் வரையுள்ளது.

2.2.3 தத்துவ நோக்கு
உலக வரலாற்றை நோக்கும்போது கிரேக்கர்கள் கோயிற் பண்பாடு என்பதனை வளர்த்துப் பெருமை கொண்டனர்; அவர்களைப் போலவே தமிழ்ப் பெருமக்கள் கோயிற் பண்பாட்டை உருவாக்கிக்காட்டிப் பெருமை கொண்டுள்ளனர்.

கோயில் என்றதும் மக்கள் தம் அகத்தே உணர்ந்த - அனுபவித்த - அழகனுபவத்தை ஆகம முறைப்படி புறத்தே புலப்படுத்திய கவின் கலைப்படைப்பு எனலாம். ஆனால், அதற்கு மேலும் சிந்திக்க வேண்டிய நுண்குறிப்பு உண்டு; அது அறிவியலுக்கும் அருளியலுக்கும் பொருந்தி வரக்கூடியதே.

மானுடவுடம்பு ஐம்பூதங்களின் சேர்க்கையால் அமையப் பெற்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படையில் ஒவ்வொரு கோயிலும் (உடம்பையொத்து அமைக்கப்படுவதால்) ஐம்பூதங்களின் கூட்டுறவுப் பரிணாமத்தை ஒருவகையில் புலப்படுத்தும் கலைப்படைப்பாகும்.

ஒவ்வொரு கோயிலின் உறுப்புகளாக அமைந்துள்ள கற்கள் (கட்டடமும் சிற்பமும்) ‘நிலத்தைக் குறிக்கும்; கோயில் தீர்த்தமாகவுள்ள திருக்குளம் கிணறு முதலியவை ‘நீர்’ எனும் பூதத்தைக் குறிக்கும் . அவற்றுடன் (கருப்பூரச்சுடர் உள்ளிட்ட) ஒளி விளக்குகள் ‘தீ’ எனும் பூதமாகும். இங்கு ஒரு நுட்பக்குறிப்பு உண்டு; ஒளிவிளக்கு நம் கண்ணுக்குப் புலப்படினும், சுடரொளியை வழங்கத் துணை நிற்பது ‘காற்று’ எனும் பூதமாகும். ஐம்பூதங்களே மக்களுக்குப் பரம்பொருளை நினைவுபடுத்தும் வகையில் கூட்டுறவு கொண்டு எழும்பியதே கோயில் என்பது தெரியவரும். சுருங்கக் கூறின், எங்கும் நிறைந்த பரம்பொருளை நினைக்கும் முறையில், ஐம்புலப்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் ஆலயத்தின் கோபுரம், விமானம், மண்டபம், தூண், சுவர், தீர்த்தம் என்றெல்லாம் ஆகம அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.
(தொடரும்...)

No comments:

Post a Comment

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...